Sunday, April 3, 2011

திருமண மண்டப வாயிலில் ஏன் வாழை மரங்கள்?

விழாக்களின் போது, வாயிலில் வாழை மரத்தினைக் கட்டுவது, தமிழர் வழக்கம். வீடுகளிலும் ஆலயங்களிலும் திருமண மண்டபங்களிலும் தொழிலகங்களிலும் இன்னும் விழாக்கள் நிகழ்கிற எல்லா இடங்களிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது.



திருமணம் நிகழ்கிற இடங்களில், கன்றுகள் ஈன்று, குலை தள்ளிய வாழையினைக் கட்டுவது, ஒரு குறியீடாகக் கருதப் பெற்றிருக்கலாம்.

*

இந்த வாழையினைப் போன்று, மணமக்களும் பிள்ளைகள் பெற்று, வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழட்டும் என்ற வாழ்த்தாகவும் அது இருக்கலாம். நாளடைவில் இந்த வழக்கம், திருமணத்தினைத் தாண்டி, அனைத்துச் சுப நிகழ்ச்சிகளுக்குமாக நீண்டிருக்கலாம்.

*


குலை தள்ளிய வாழையினை கட்ட வேண்டும் என்ற மரபினை மீறி, ஆயுத பூஜையின் போது, இரு சக்கர வாகனங்கள், மகிழுந்து, பொதியுந்து.... உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளின் வாழைக் குருத்துகளைக் கட்டி வைக்கிறார்கள்.

*

இது, முன்னோரின் நோக்கத்திற்கு மாறானது. இத்தகைய செயல், வாழையை வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறது.

*


வீடுகள், தொழிலகங்களில் எப்போதாவது ஒரு முறைதான் விழா நிகழ்கிறது. ஆனால், திருமண மண்டபங்களில் நாள்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே நாள்தோறும் புதிதாக வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டி வைக்கிறார்கள்.

*

முதல் நாள் கட்டப்பெற்ற வாழை மரமானது, அடுத்த நாள் ஒரு குப்பையாக வீசப்படுகிறது. பெரும்பாலும் தெருவில் திரியும் மாடுகள், அவற்றின் இலைகளைத் தின்னுகின்றன.

*


இந்த வாழை மரங்களை அவை வளர்ந்த இடத்திலிருந்து வெட்டி, திருமண மண்டபத்திற்குக் கொண்டு வரும் காட்சியை நீங்கள் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். டிரை சைக்கிள் எனப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் படுக்கை வாட்டில் வைத்துக் கட்டப்படும்.

*

வாழையிலைகள் கொண்ட தலைப்பகுதி, வண்டியை விட்டு வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை தரையில் தேய்ந்தபடி, புழுதியில் புரண்டபடி, அலங்கோலமாக வந்து சேரும்.

*

பிறகு, அவற்றைத் தூக்கிக் கட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். இப்படித்தான் அந்த மங்கலச் சின்னம், எல்லோரையும் வரவேற்க வருகிறது.

*


வாயிலில் துவார பாலகர்களைப் போல நிற்கும் இவை, எவ்வளவு ரணங்களைத் தம்முள் கொண்டிருக்கும் என எளிதில் கணிக்கலாம். கால் வெட்டப்பட்டு, உடல் கட்டப்பட்டு, இலை கிழிந்து நிற்கிற இவை, ஒரு சடங்காக அன்றோ மாறிவிட்டன?

இதற்கு மாற்று வழி என்ன எனச் சிந்தித்தபோது, இந்த யோசனை பிறந்தது.

*


திருமண மண்டபங்களின் வெளியே, முதன்மை வாயிற் கதவின் ஓரத்தி்ல், நிலையாக இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து விடலாமே! அவை எல்லா நாட்களிலும் மங்கலச் சின்னமாகத் திகழுமே! தன் கன்றுகளோடு அவை மகிழ்ந்து சிரிக்குமே! இதன் மூலம் அவற்றுக்கு விலை தந்து, வெட்டி, தரதரவென இழுத்துவந்து, வாயிலில் கட்டும் கொடுமையும் நிகழாது; அதற்கென நேரமும் பணமும் உழைப்பும் செலவிடவும் வேண்டாமே!

*


மாடுகள் வந்து தின்னாவண்ணம், ஒரு வேலியிட்டால் போதும். வாசல் தெளித்துக் கோலம் போடும்போதே, அதற்கும் சிறிது நீர் வார்த்தால் போதும்.

*

அல்லது, மண்டபத்தின் கால்-கை கழுவும் தண்ணீரையும் அவற்றில் சேரச் செய்யலாம். இதன் மூலம், கழிவு நீரை அப்புறப்படுத்தும் செலவிலும் சிறிது குறையும்.

*

முற்றிய பிறகு அந்த மரத்தின் இலை, பழம், நார்... என அனைத்தையும் மண்டபத்தினரே பயன்படுத்திக்கொள்ளலாம்.


***

நன்றி: சென்னை லைவ் நியூஸ்

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment