Tuesday, November 23, 2010

வாழ்நாள் முழுவதும் மனைவியை சுமந்து வலம்வரும் மகா புருஷன்

தூக்கத்தில் குறட்டை விடுவதால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி, ருசியாக சமைக்க தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் ஆகியோருக்கு மத்தியில், இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களையும் இழந்த மனைவி மற்றும் நடைபழகும் பச்சிளம் குழந்தை ஆகியோரை தூக்கி சுமந்தபடி வலம் வருகிறார் ஒரு வட மாநில வாலிபர். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அங்கு கூலி வேலையை பார்த்து வந்தார். திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்த அவர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்தார். பல எதிர்ப்புகளுக்கு இடையே நிஷாவை திருமணம் செய்து கொண்டார். மகள் பிறந்தாள். குடும்பம் வளர்ந்தது. தனி மனிதனாக இருந்தபோது சமாளித்த நிஷாந்த் மனைவி, பிள்ளை என்று ஆனதால் கூலி தொழிலில் வந்த வருமானத்தில் அவர்கள் கால் வயிறு உணவு சாப்பிட கூட முடியாமல் தவித்தனர்.திடீரென அவர்கள் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டது. கூலி வேலை கூட கிடைக்காமல் தவித்தார் நிஷாந்த். அப்போது, அவரது நண்பர்கள், தமிழகத்தின் பெருமைகளை பற்றி கூறினர். இதையடுத்து, மனைவி குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் ரயில் ஏறி சென்னையில் இறங்கினார்.கனவுகளுடன் சென்னை வந்த நிஷாந்திற்கு மொழி உள்ளிட்ட பல பிரச்னைகளால் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற நிஷாந்த் பசி கொடுமையால் இறுதியில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தர்மவான்கள் பிச்சையிடுவதில் கிடைக்கும் பணத்தில் மூவரும் பசியாறி மரத்தடி நிழலில் வசித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து நிஷாந்த் கூறுகையில், "உழைத்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். ஆனால், பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன். என் மனைவி, குழந்தை மீது நான் அளவுகடந்த பாசம் வைத்துள்ளேன். பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்தில் அவர்களுக்கு முதலில் உணவு வாங்கி கொடுத்து விட்டு தான், பின் நான் சாப்பிடுவேன். கஷ்டத்திலும் மனைவி அளிக்கும் ஆறுதலான வார்த்தைகள் எனக்கு தெம்பு கொடுக்கும். அவளுக்கு கால்கள் இல்லை. வாழ்நாள் முழுவதும் அவளை நான் சுமப்பதை பெருமையாக கருதுகிறேன். விரைவில் வேலை தேடி குடும்பத்தை நல்ல முறையில் காப்பாற்றுவேன்' என நம்பிக்கையுடன் கூறினார் நிஷாந்த்.


 
http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

உடல் ஆரோக்கியத்துக்கு 10 கட்டளைகள்!

நமக்கு வயதாகும் போது, தினமும் நாளிதழ்களை படிக்க துவங்கி விடுவோம். எதற்காக? ஆரோக்கியம் குறித்த தகவல்களைப் பெற. நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளியாகும் ஆரோக்கியக் குறிப்புகளை படிக்கத் துவங்கி விடுவோம். ஆனால், ஆரோக்கியமாக வாழ உண்மையிலேயே நாம் என்ன செய்ய வேண்டும்?
முக்கியமான 10 வழிகளை பின்பற்ற வேண்டும். அவை:
1. உடல் எடை
நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். எந்த வயதிலும், உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் எடையை (கிலோ அளவு), உங்கள் உயரத்தின் (மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண் தான் இது. உதாரணமாக, 80 கிலோ / 2  மீட்டர் x  2 மீட்டர் என்ற கணக்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தால், உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். உடல் நிறை குறியீட்டெண் அளவு 30 என இருந்தால், அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் பொருள். அதிக உடல் எடை, மூட்டு வலி, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும். அதே சமயம், உடல் எடையை பராமரிப்பதாக எண்ணி, பி.எம்.ஐ., அளவு 20 தொட்டு, "மாடல்' அழகியாக விரும்புவது, உண்மையில் ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சீரற்று போதல், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், எலும்புகள் பலவீனம் அடைதல் ஆகியவை ஏற்படும். சரிவிகித உணவு உண்ணாமல் போவது, உணவு குறித்த அர்த்தமற்ற பிரமை ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும்.
உணவு முறையில் மாற்றம் செய்து சாப்பிடத் துவங்கினால்,  உடல் எடை கூடி விடும். இதற்கு பின்னணியாக இருக்கும் நோயை கண்டறிந்து, அதை சரி செய்த பின்னரே, உடல் எடை மீது கவனத்தில் கொள்ள முடியும். தைராய்டு பிரச்னை, நீரிழிவு நோய், அதிக உணவு சாப்பிடும் போக்கு, உணவில் உள்ள சத்துக்கள் சரி விகிதத்தில் உறிஞ்சப்படாமை,  புற்றுநோய் அல்லது வேறு நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்த பிறகு, உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும். அப்போது தான் உடல் எடை சீராகும். உடலுக்கு தேவையான கலோரி அளவு கொண்ட உணவு சாப்பிட்டால், உடல் எடை எப்போதும் சீராகவே இருக்கும். தினசரி கலோரி அளவு, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 20 கலோரி என்ற கணக்கில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். உடல் எடை சீராக இருக்க, ஒரு கிலோவுக்கு 30 கலோரி அளவு என்ற கணக்கும், உடல் எடை அதிகரிக்க, ஒரு கிலோவுக்கு 40 கலோரி அளவு உணவும் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு மாறுபடலாம்.
2. இதய நோய்
இப்போதெல்லாம், 30 வயதிலேயே இதய நோய் தாக்க துவங்கி விடுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலம் வரை, இந்த நோயிலிருந்து தப்பித்து விடுவர். அதன் பின், ஆண்களை போலவே நோய் உண்டாகி விடுகிறது.
புகை பிடிக்காமல், புகை பிடிப்பவர்களின் அருகில் நிற்காமல் இருந்தால், இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டால், படபடப்பு குறையும்.
3. சரிவிகித உணவு
சரிவிகித உணவு என்பது, அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நார்சத்து அடங்கிய உணவுகள், அசைவமாக இருந்தால், மீன் ஆகியவை சாப்பிடுவது தான். பூரிதக் கொழுப்பு, அதிக உப்பு ஆகியவை அடங்கிய ரெடிமேடு உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றில் அளவுக்கு அதிகமாக கலோரிகள் இருக்கும்.
4. உடற்பயிற்சி
ஒரு மணி நேரத்திற்கு ஓட்டப் பயிற்சியோ, நடை பயிற்சியோ, நீச்சலோ மேற்கொள்ளலாம். தினமும் 20 நிமிட தியானம், யோகா ஆகியவை மேற்கொள்ளலாம்.
5. புற்றுநோய் தவிர்ப்பு
புற்றுநோயை தவிர்ப்பது அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது ஆகியவை, வாழ்நாளை அதிகரிக்கும். சரியான உடல் எடை, சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, புகை பிடிக்காமை, ஓரளவு மட்டுமே மது அருந்துதல் ஆகியவை புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஹெப்பாடைட்டிஸ் பி வைரசுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால், கல்லீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பப் பை வாய் புற்றுநோயைத் தடுக்க, எச்.பி.வி., தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம். "பாப் ஸ்மியர்' பரிசோதனை, மார்பக சுய பரிசோதனை, மேமோகிராபி ஆகியவை, மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும்.
கோலோனோஸ்கோபி மற்றும் "ப்ராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்ட்டிஜென்' ஆகியவை, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள்.
6. காயங்களை தவிர்த்தல்
இந்தியாவில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் உயிரிழப்புகள், விபத்தால் ஏற்படுகின்றன. 12 லட்சம் பேர், படுகாயம் அடைகின்றனர்; மூன்று லட்சம் பேருக்கு, விபத்தால் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இருவரும், ஹெல்மெட் அணிந்தால், விபத்து ஏற்படும் போது, காயமின்றி தப்பிக்கலாம். ஒரு வாகனத்தில் மொத்த குடும்பத்தையும் ஏற்றிச் செல்லவே கூடாது. கார் பயணத்தின் போது, "சீட் பெல்ட்' அணிவது கட்டாயம். சிலர், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது மட்டும், "சீட் பெல்ட்' அணிகின்றனர்; இது தவறு. குறைந்த தூரத்தில் செல்லும் போது கூட, "சீட் பெல்ட்' அணிய வேண்டும். வீடுகளில், வழுக்கு தரை, படிகள், குளியலறைகள் ஆகியவற்றில் வழுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் அதிக வெளிச்சம் ஏற்படுத்தி, கைப்பிடிகளும் வைத்தால், இந்த நிலையை தவிர்க்கலாம். கழிவறைகளில் போதுமான அளவு கைப்பிடிகள் வைத்தால், முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
7. முழு உடல் பரிசோதனை
உயரம், எடை, ரத்த பரிசோதனை, இருதயம், நுரையீரல், வயிறு ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை குறித்து, ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண், பல் ஆகியவற்றுக்கும் ஆண்டுதோறும் பரிசோதனை தேவை. பரிசோதனைக் கூடங்கள் நடத்தும் மருத்துவ முகாமில், அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தேவையில்லை. வேண்டாத பரிசோதனைகளை செய்வது, அதிகச் செலவை ஏற்படுத்தும். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவை குறித்த பரிசோதனை, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
8. தீவிர நோய்
நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர பாதிப்பு கொண்டவர்கள், உணவுக் கட்டுப்பாட்டையும், மருந்து உட்கொள்வதையும், மிகச்சரியாக பின்பற்ற வேண்டும். டாக்டர்கள் குறித்து கொடுத்த நாட்களில், நேரில் சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முறையாக கையாளும் நோயாளிகள், பெரிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.
9. நோய் தடுப்பு மருந்துகள்
செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், குளிர்க்காய்ச்சலைத் தவிர்க்கும் ஊசிகளை, முதியோர் போட்டுக் கொள்ள வேண்டும். அந்தந்த ஆண்டுகளில் ஏற்படும் குளிர் காய்ச்சலை தடுக்க இந்த மருந்து உதவும். வேகமாகப் பரவும் நோய்கள் ஏதும் இருந்தால், அதற்கான தடுப்பு ஊசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும். 65 வயது நிரம்பியவர்கள், "நியூமோகாக்கல்' தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு முறை போடப்பட வேண்டிய ஊசி இது.
10. ஊட்டச்சத்து மாத்திரைகள்
முதியோருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 1,200 மி.லி., கிராம் அளவுக்கு கால்சியம் சத்து மாத்திரை சாப்பிட வேண்டும். டானிக்குகளோ, புரோட்டீன் சப்ளிமென்ட்டுகளோ தேவையில்லை.


 
http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

முதுமையில் கூன் விழுவது ஏன்?

 
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.  முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று.  முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுது பாட்டால் (Degeneration of vertebrae)  வருவதாகும்.
முதுகெலும்பு பழுதுபாடு

முதலில் கழுத்துப் பகுதியில் உள்ள முதுகெலும்புகள் (வம்சிகள்) பழுதுபடக் காரணம் தலையில் அதிக பளு தூக்குவது.  மேலும் கவிழ்ந்த நிலையில் நீண்ட நேரம் வேலை செய்வது போன்ற காரணங்களால் கழுத்து வம்சிகள் குறிப்பாக 6வது மற்றும் 7வது (C6,C7) (Cervical vertebrae)  வம்சிகள் பாதிக்கப்பட்டு, சில சமயம் முதுகு எலும்பு தேய்மானம் ஏற்பட்டு அதன் விளைவாக கழுத்து முன்னுக்குத் தள்ளப்பட்டு அதன் இயல்பான ( normal posture) நிலையிலிருந்து மாறி கூன் விழுந்தது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இதேபோல் வயது முதிர்ந்த காலத்தில் இடுப்புப் பகுதியில் உள்ள வம்சிகளில் (Lumbar vertebrae) வரும் பழுது மற்றும் தேய்மானம் வழக்கமானது.

குறிப்பாக 4,5 வது இடுப்பு வம்சிகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் சாதாரணமான ஒன்று.

பழுதுபாடுகளுக்கான பொதுவான காரணங்கள்
 
 
· அதிகப்படியான பளு தூக்குதல்
 
· இயந்திரங்களில் அதிக நேரம் பணியாற்றுதல்

· அதிகமாக இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை உபயோகித்தல்.

· பொருத்தமில்லாத இருக்கைகளில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல்

· புகைப்பழக்கம்

· மது, போதைப் பழக்கம்

· மன உளைச்சலுடன் நீண்ட நேரம் பணியாற்றுதல்.

· மிகுந்த கோபம், தாழ்வு மனப்பான்மை

· விபத்தால் முதுகுப் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருத்தல்.

வம்சிகளின் இடைத்தட்டு பிறழ்ச்சி

பொதுவாக இடுப்பு வம்சிகளில் ஒரு வம்சிக்கும் மற்றொரு வம்சிக்கும் இடையில் இருக்கும், வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும், அல்லது மேற்சொன்ன பல காரணங்களினாலும், தான் இருக்கும் இயல்பான இடத்திலிருந்து  விலகி விடுகிறது.

இதனால் மேலும் கீழும் இருக்கும் வம்சிகள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று உராய்வதால், அது நாளடைவில்  எலும்புத் (Erosion) தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பு அமைப்பு இயல்பான நிலையிலிருந்து (Posture))  விலகி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தைத் தருகிறது.

எலும்புகளின் துணை வளர்ச்சி

சில நேரம் இந்த வம்சிகளுக்கு அருகில் ஒரு சிறு எலும்புத்துண்டு வளர்ந்து (Osteophytes)  அது நாளடைவில் வம்சித் துளை (Inter vertebral foraman) யை சூழ்ந்து வளர்ச்சி அடைவதால் அப்பகுதியில் உள்ள நரம்புகள் அழுத்தப்பட்டு, மிகுந்த வலியை உண்டாக்குகிறது.

காச நோயினால் கூன் விழுதல்

50 விழுக்காடு, காச நோயின் காரணமாக முதுகெலும்பு பாதிக்கப்பட்டு அவை பழுதாகி அதன் இயல்பான நிலை மாறி கூன் விழுவதற்கு காரணமாகிறது.

சத்துப் பற்றாக்குறை

வயதான காலங்களில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து போதிய அளவு கிடைக்காமல் போவதால் எலும்புகள் வன்மை குன்றி, மெலிவுற்று (Osteoporosis)  அதனாலும் கூன் விழுவதற்கு காரணமாகிறது.

கூன் விழுவதை தடுக்கும் வழிகள்

கவிழ்ந்த நிலையில் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.

சற்று மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்கலாம்.

வயது முதிர்ந்த காலத்தில் வாதத்தை மிகுதிப்படுத்தும் உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றையும், வாதம்உண்டாக்கும் பருப்பு வகைகளையும் தவிர்க்கலாம்.

அடிக்கடி வெந்நீர் ஒற்றடமிடுதல் நல்லது.

பத்மாசனம், சித்தாசனம், சக்கராசனம், தனுராசனம் போன்ற முதுகெலும்புக்கு வன்மை உண்டாக்கும் ஆசனங்களை மேற்கொள்வது மிகவும் நல்லது.


http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net