Thursday, March 31, 2011

நகத்தை பாருங்கள் நலம் தெரியும்

னிதனின் கை, மற்றும் கால் விரல்களின் நுனிப்பகுதியை ஒரு தகடு போன்று மூடி இருப்பதுதான் நகங்களாகும். நகங்கள் `கெரட்டின்' என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே நகமும் அமைந்திருக்கிறது.

மனிதனைப் போல் சில பாலூட்டி விலங்குகளுக்கும் நகங்கள் உண்டு. ஆடு, மாடுகளின் கால் விரல் நுனிப்பகுதியை `குளம்பு' என்று நாம் சொல்லுவதுண்டு. மனிதனுக்குள்ள நகங்கள்தான் சற்று மாறி, விலங்குகளுக்கும் அதன் உபயோகத்திற்கேற்ப, `குளம்பு' என்ற பெயரில் மிகக் கடினமான, மிக உறுதியான, சற்று நீளமான பெரிய நகங்களாக காட்சியளிக்கின்றது.

மனித உடலின் நுனிப் பகுதிகளாக இருப்பது கை விரல்களும் கால் விரல்களும் தான். விரல்கள் அனைத்துமே மிக மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகங்கள் இல்லையெனில் விரல்களுக்கு அதிக பாதுகாப்பில்லை.

நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. ஒருவருக்கு மிக வேகமாக வளரும். இன்னொருவருக்கு மிக மெதுவாக வளரும். கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். அதனால்தான் கைவிரல் நகங்களைப் போல கால்விரல் நகங்களை நாம் அதிகமாக வெட்டுவதில்லை. அதேபோல் ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு சராசரியாக 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். கைவிரல் நகங்கள் விழுந்து புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும். அதே நேரத்தில் கால் விரல் நகங்கள், புதிதாக முழுவதும் வளர, சுமார் 1 முதல் 11/2 ஆண்டுகள் ஆகும். மழைக்காலத்தை விட, வெயில்காலத்தில் நகங்கள் வேகமாக வளரும்.

ஒருவருடைய வயது, அவர் ஆணா- பெண்ணா, அவரது அன்றாட உழைப்பு, அவரது சாப்பாடு விஷயங்கள், அவரது பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே, நகங்கள் வளரும் நீளமும் வேகமும் அமையும்.

மனிதன் இறந்த பிறகும் நகம் வளரும் என்று சிலர் சொல்வதுண்டு. இது உண்மையல்ல. இறந்தவுடன் நகத்திற்குக் கீழுள்ள தோலிலும், தசையிலுமுள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கி, இறுக ஆரம்பித்து விடும். தோல் சுருங்கி இறுகி விடுவதால், நகம் மேலே நீளமாக, பெரிதாக தெரிய ஆரம்பிக்கும். இதுதான் உண்மை. இறந்த பிறகு நகம் வளரவே வளராது.

அநேகம் பேர் அழகுக்காக நகங்களை வளர்க்கிறார்கள். ஆண்களை விட, பெண்கள் தான் அதிகமாய் நகம் வளர்க்கிறார்கள். ஆனால் சிலர், தான் வளர்க்கும் நகத்தை ஒழுங்காக சீவி, வெட்டி, நெயில் பாலிஷ் எல்லாம் போட்டு, நகங்களுக்கடியில் அழுக்கு சேரவிடாமல் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அநேகம் பேர் இதைக் கண்டுகொள்வதே இல்லை.

சிலருக்கு நகம் அடுத்தவர்களை கிள்ளிவிட மட்டுமே உபயோகப்படும். சிலருக்கு நகம் அவர்கள் செய்யும் வேலைக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். பஸ் கண்டக்டருக்கு டிக்கெட் கிழிக்க, டெய்லருக்கு துணி மற்றும் காஜா பட்டன் தைக்க நகம் மிகவும் உபயோகப்படுகிறது. கேரளாவில் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் நிறைய பேர் கட்டை விரல் நகத்தையும், ஆள் காட்டி விரல் நகத்தையும் சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பார்கள். தேயிலைச் செடியிலிருந்து கொழுந்துகளை வேக வேகமாக பறிப்பதற்கு நகம் அவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. வீட்டில் சமையலறையில் வெங்காயத்தை உரிப்பதற்கும், வேக வைத்த முட்டை தோலை கீறி உடைப்பதற்கு நகம் கொஞ்சம் நீளமாக இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று வீட்டுப் பெண்மணிகள் சொல்வதுண்டு. பெண்களின் பாதுகாப்புக்கு கூட நகங்கள் சில சமயங்களில் உபயோகப்படுவதுண்டு.

கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த `லீ ரெட்மாண்ட்' என்ற பெண் 28 அடி 41/2 அங்குலம் நீளத்திற்கு கை விரல் நகத்தை வளர்த்து சாதனை புரிந்துள்ளார். 1979-ம் ஆண்டிலிருந்து நகம் வளர்க்க ஆரம்பித்த இவர், 23.02.2008-ல் இந்த சாதனையை அடைந்துள்ளார். அதே அமெரிக்காவைச் சேர்ந்த `மெல்வின் பூத்' என்பவர் 32 அடி, 3.8 அங்குலம் நீளத்திற்கு கைவிரல் நகத்தை வளர்த்து 30.05.2009-ல் சாதனை புரிந்துள்ளார். நமது உடல் உயரத்தை மாதிரி சுமார் ஆறு மடங்கு நீளம் இவர் தனது நகத்தை

வளர்த்துள்ளார்.நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, இவருக்கு இன்ன நோய் இருக்கும் என்ற ஓரளவு கண்டுபிடித்து விடலாம். உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம். மருத்துவமனையில் நோயாளியாக வரும் ஒருவரின் கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டுபிடித்து விடலாம்.

நகங்களின் குறுக்கே, அதிக பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகி விட்டது என்று அர்த்தம்.

நகத்தில் அதனுடைய இயற்கையான நிறம் போய், வேறு நிறம் தென்பட்டாலோ, நகம் மிகமிக மெல்லியதாக இருந்தாலோ, நகம் மிக மிக தடியாக இருந்தாலோ, நகம் சுலபமாக உடைந்து போகிற மாதிரி இருந்தாலோ, நகத்தில் பிளவு இருந்தாலோ, நகரத்தில் வெடிப்பு இருந்தாலோ, நகத்தில் பள்ளமான கோடுகள் இருந்தாலோ, நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தாலோ, மொத்த நகமும் குவிந்து வளைந்து இருந்தாலோ, நகம் லேசாக வளைந்திருக்காமல் தட்டையாக இருந்தாலோ, நகம் உள்பக்கம் வளைந்திருந்தாலோ, இவை எல்லாம் உடலில் ஏதோவொரு இடத்தில் நோய் இருக்கிறது என்பதை காட்டும் அறிகுறியாகும். சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். `பங்கஸ்' என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது. நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், `சயனோஸிஸ்' என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று அர்த்தம்.

இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை `க்ளப்பிங்' என்று கூறுவதுண்டு.

சருமத்தைப் போல நகங்களும் காய்ந்து, உலர்ந்து போக வாய்ப்புண்டு. சில சமயங்களில் நகம் அதிகமாக காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.

சமையல்காரர்கள், துணி துவைப்பவர்கள், கெமிக்கல் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கைவிரல் நகங்கள் அதிகமாக பாதிப்படையும். கால் விரல் நகங்களும் அப்படித்தான் பாதிப்புக்குள்ளாகின்றன. கால் விரல்களை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளாததால், நகங்களில் நோய் ஏற்படுகின்றன.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி சிலர் பார்ப்பதற்கு மிக அழகாக, மிக சுத்தமாக இருப்பது போன்று தோன்றுவார்கள். ஆனால் அவர்களுடைய காலையும், கால் விரல்களையும் பார்க்க சகிக்காது. அவ்வளவு அசிங்கமாக வைத்திருப்பார்கள். கால் விரல்களுக்கு கண்டிப்பாக கவனிப்பு அவசியம்.

தினமும் ஷூ போடும் பழக்கமுள்ளவர்கள் தினமும் துவைத்த சாக்ஸை அணிய வேண்டும். ஒருநாள் முழுக்க, காலுக்கும், ஷூவுக்கும் இடையில் இருக்கும் சாக்ஸ்களை கழற்றி, கழற்றி போடுவதினாலும், வியர்வையினாலும் சீக்கிரமே அழுக்காகி, சில நேரங்களில் நாற்றமடிக்கவே ஆரம்பித்து விடும். சில பேர் டிப்-டாப்பாக டிரெஸ் பண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஷூவைக் கழற்றினால், நாற்றம் தாங்க முடியாது. எனவே சாக்ஸை தினமும் மாற்ற வேண்டும். மேலும் முரட்டுத்தனமான சில உடற்பயிற்சிகள் செய்யும் போது கால் விரல் நகங்கள் பாதிக்கப்படும். ஷூ ரொம்ப டைட்டாக போட்டால் கூட கால் விரல் நகங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே சரியான அளவு பார்த்து காலனிகளை வாங்க வேண்டும். வெளியில் நடந்து போகும் போது, அதுவும் செருப்பில்லாமல் நடக்கும் போது, விரல் நகங்களில் கல், முள், கம்பி போன்றவை பட்டு நகங்கள் பாதிக்க வாய்ப்புண்டு.



http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net