Tuesday, April 5, 2011

கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

கர்ப்ப காலம் என்பது அதிலும் முதல் கர்ப்பம்... ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வலி நிறைந்த சாதனையென்றால் அது மிகையில்லை.





கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இதை ஃபாலோ செய்தால் ஆபத்தில்லாத பிரசவமும், ஆரோக்யமான குழந்தையும் நிச்சயம் என்கிறார் சென்னையில் மிகப் பிரபல கப்பேறு மருத்துவரான டாக்டர் அமுதா ஹரி!

*


திட்டமிட்டு கருத்தரியுங்கள்:


திருமணமானவுடன் உடனடியாக கருத்தரிப்பதை விரும்பாத தம்பதிகள் அதற்கேற்ப திட்டமிட்டு குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். கருத்தரித்தபின் அபார்ஷன் செய்து கொண்டால் அடுத்த குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கும், தாயின் உடல் நிலைக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடும்!


*

டாக்டர் ஆலோசனை இல்லாமல் நோ டேப்லெட் ப்ளீஸ்!


கர்ப்ப காலத்திற்குத் திட்டம் போடும் பொழுது கூட இரத்த உறவுகளில் திருமணம் செய்து கொண்டவரா, அவர்களது பரம்பரையில் யாருக்காவது பெரிய வியாதிகள் இருக்கிறதா? என்பதை எல்லாம் மருத்துவரிடம் சொல்லி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

*

கர்ப்பம் தரித்தவுடன், அல்லது மாதவிலக்கு 15 நாட்கள் தள்ளிப் போனவுடன் வேறு ஏதேனும் வியாதிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தள்ளிப் போட வேண்டும். ஏற்கெனவே உடல் நலக்குறைவு இருந்து, அதற்கு ஃபோலிக் ஆஸிட் மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அதை நிறுத்தி விடலாம்!

*

கர்ப்பகாலத்தில் வேறு ஏதாவது உடல் நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவருடைய ஆலோசனை பெறாமல் தன்னிச்சையாக மாத்திரை மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.
கர்ப்ப காலத்தில் வரும் சுகருக்கு மாத்திரை போடக் கூடாது. சர்க்கரை நோய் மருத்துவரைப் பார்த்து உணவு மூலமே சரி செய்ய முயற்சிக்க வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால் வாரம் ஒருமுறை, இருமுறை இரத்தப் பரிசோதனை செய்து இன்சுலின் போட்டுக் கொள்ளலாம்.

*

அப்படிச் செய்யாமல் இருந்தால் குழந்தை அதிக எடையுடன் பிறக்கும். பிறவிக் கோளாறுகளும் வரலாம். குழந்தைக்கு சர்க்கரை வியாதி வரவும் வாய்ப்பு உண்டு. ஏன் வயிற்றிலேயே குழந்தை இறக்கக் கூட வாய்ப்புகள் அதிகம்.

*


கர்ப்பிணிகளுக்கு இரத்தக் கொதிப்பு இருக்குமானால் ஸ்பெஷல் கவனம் தேவை. டாக்டர் அட்வைஸ்படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சாதாரணமாகக் கால்கள் வீங்கித் தானாகக் குறைந்து விடுமானால் பிராப்ளம் இல்லை. ஆனால் உடல் முழுதும் வீங்கி வந்தால் நிச்சயம் அது ஹை பி.பி. ஆக இருக்கும்.


***

என்னென்ன சாப்பிடலாம்?


கர்ப்பம் உறுதியானால் தலைசுற்றல், வாந்தி, லைட்டாக உதிரம் கூட வரலாம். காரம் மற்றும் எண்ணெய் அதிகம் இல்லாமல், 3 மணி நேரத்துக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். ப்ரூட்ஸ், தண்ணீர் என நிறைய எடுத்துக் கொள்ளலாம். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். வாந்தி அதிகமாக இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரத்த சோகை இருந்தால் டயட்டில் பீட்ரூட், கேரட், பேரீச்சை, ஆப்பிள், கீரை வகைகளைச் சாப்பிட வேண்டும்.

*

அதிகக் கொழுப்புள்ள உணவு வகைகள், ஃபாஸ்ட் ஃபுட், கோக் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு எடையை ஏற்றிக் கொள்ளக்கூடாது.


***

நீங்கள் செய்ய வேண்டிய ஸ்கேன் மற்றும் டெஸ்ட்கள்!


கர்ப்ப காலத்தை:

முதல் மூன்று மாதங்கள், இரண்டாவது மூன்று மாதங்கள், மூன்றாவது மூன்று மாதங்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

*

முதல் ஆறு மாதங்கள், மாதம் ஒரு முறையும், மீதி மூன்று மாதங்கள் மூன்று வாரத்துக்கு ஒரு முறையும் செக்கப்புக்குப் போக வேண்டும்.


*

முதல் மூன்று மாதங்களில் வாந்தி, எடை குறைதல், களைப்பு, தலைசுற்றல் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் இரத்தப் பரிசோதனை எந்தப் பிரிவு இரத்தம், பால்வினைத்தொற்று போன்ற நோய்கள் இருக்கிறதா, முக்கியமாக இரத்தம் நெகடிவ் குரூப்பா, இரத்த சோகை இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

***


கவனியுங்க கணவர்களே:


முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவினைத் தவிர்க்கலாம் அல்லது மனைவியின் உடல் நிலையைப் பொறுத்து மிதமாக ஏற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அபார்ஷன் ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கும்.

*

கர்ப்ப காலத்தில் பிரயாணங்கள் வேண்டாம்.

*

கர்ப்பத்தின் போது யோகா, உடற்பயிற்சிகள் செய்வது என்றால், வயிறு விரிந்து சுருங்கும் சில பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

*
முதலாவது, இரண்டாவது மாதத்தில் மூச்சுப்பயிற்சி மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகளைத் தெரிந்து கொண்டு மனைவியுடன், கணவனும் சேர்ந்து செய்தால், இருவருக்கும் இடையில் நல்ல ஒரு புரிதலும், இன்வால்வ் மென்ட்டும் வரும்! நடைப் பயிற்சியும் நல்லது.

*
மூன்றாவது மாதத் துவக்கத்தில் முதல் ஸ்கேன் செய்து கருக் குழாயிலிருந்து கரு, கர்ப்பப்பைக்கு வந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.

*

இரண்டாவது ஸ்கேன் இது குழந்தைக்கு நார்மலான, நல்ல இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம்.

*

மூன்றாவது ஸ்கேனை பதினாறிலிருந்து இருபது வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இது குழந்தையின் அங்க அவயங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு.

*

நான்கு, ஐந்து, ஆறாம் மாதங்களில் சர்க்கரையும், பி.பி.யும் உயர் இரத்த அழுத்தமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். (இதற்கு முன் இல்லாமல் இருந்து இப்பொழுது இருந்தால் பயப்படத் தேவை இல்லை. குழந்தை பிறந்து ஆறு வாரங்களில் இது சரியாகி விடும்.)

*


குழந்தையின் அசைவு 7ம் மாதத்திலேயே தொடங்கிவிடும். அப்படித் தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.

*

வாரம் அரை கிலோ எடை ஏறுவதுதான் மெடிக்கலி ஆரோக்கியமான, சரியான விஷயம். பிரசவகாலத்தில் கடைசி மூன்று மாதங்களில்தான் சரியான எடைகூடும்.

*

கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக்கூடாது. குழந்தையின் எடை கர்ப்பப்பையை அழுத்தி இரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.

*

டெலிவரி நேரத்தில் அல்லது 9வது மாதத்தில் சில நேரத்தில் வலி தோன்றும்... பிரசவ வலி என்றால் விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும். போகப் போக வலி அதிகரிக்கும். சாதாரண வலி என்றால் வந்து விட்டுப் போய் விடும்.

*

எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லை என்றாலோ, வலி இல்லாமல் சிறுநீர் மாதிரி தண்ணீர் போய்க் கொண்டு இருந்தாலோ, சில சமயம் வலியுடன் நீர்போவதும் உணர்ந்தாலோ உடனே மருத்துவரைத் தேடிப்போகவேண்டும்.


***


35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பமா?


35 வயதுக்கு மேல் முதல் கர்ப்பம் தரிக்கும் பெண்களை ஸ்பெஷல் கவனம் கொடுத்து தனியாக பரிசோதனைகள் மற்றும் ட்ரீட்மெண்ட்கள் தர வேண்டும்.

*

வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலி பொறுத்துத்தான் ஆகவேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும். சிசேரியனைத் தவிர்க்கலாம்.

*

ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். பயப்படக்கூடாது.

*

கர்ப்பமான நேரத்தில் தாய் அமைதியான மனதுடன், தெளிவான எண்ணங்களுடன் மனசுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் தாய்மை ஒரு இனிய அனுபவம் ஆக இருக்கும்!

***

நன்றி கூடல் தளம்.

***


"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment: