Tuesday, November 23, 2010

உடல் ஆரோக்கியத்துக்கு 10 கட்டளைகள்!

நமக்கு வயதாகும் போது, தினமும் நாளிதழ்களை படிக்க துவங்கி விடுவோம். எதற்காக? ஆரோக்கியம் குறித்த தகவல்களைப் பெற. நாளிதழ்கள், பத்திரிகைகளில் வெளியாகும் ஆரோக்கியக் குறிப்புகளை படிக்கத் துவங்கி விடுவோம். ஆனால், ஆரோக்கியமாக வாழ உண்மையிலேயே நாம் என்ன செய்ய வேண்டும்?
முக்கியமான 10 வழிகளை பின்பற்ற வேண்டும். அவை:
1. உடல் எடை
நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். எந்த வயதிலும், உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் எடையை (கிலோ அளவு), உங்கள் உயரத்தின் (மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண் தான் இது. உதாரணமாக, 80 கிலோ / 2  மீட்டர் x  2 மீட்டர் என்ற கணக்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தால், உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும். உடல் நிறை குறியீட்டெண் அளவு 30 என இருந்தால், அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் பொருள். அதிக உடல் எடை, மூட்டு வலி, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் ஆகியவற்றுக்கு காரணமாக அமையும். அதே சமயம், உடல் எடையை பராமரிப்பதாக எண்ணி, பி.எம்.ஐ., அளவு 20 தொட்டு, "மாடல்' அழகியாக விரும்புவது, உண்மையில் ஆரோக்கியக் குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால், மாதவிடாய் சீரற்று போதல், கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், எலும்புகள் பலவீனம் அடைதல் ஆகியவை ஏற்படும். சரிவிகித உணவு உண்ணாமல் போவது, உணவு குறித்த அர்த்தமற்ற பிரமை ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும்.
உணவு முறையில் மாற்றம் செய்து சாப்பிடத் துவங்கினால்,  உடல் எடை கூடி விடும். இதற்கு பின்னணியாக இருக்கும் நோயை கண்டறிந்து, அதை சரி செய்த பின்னரே, உடல் எடை மீது கவனத்தில் கொள்ள முடியும். தைராய்டு பிரச்னை, நீரிழிவு நோய், அதிக உணவு சாப்பிடும் போக்கு, உணவில் உள்ள சத்துக்கள் சரி விகிதத்தில் உறிஞ்சப்படாமை,  புற்றுநோய் அல்லது வேறு நோய்கள் உள்ளதா என்பதை பரிசோதனை செய்து அறிந்து கொண்டு, அதற்கான சிகிச்சை எடுத்த பிறகு, உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்ற வேண்டும். அப்போது தான் உடல் எடை சீராகும். உடலுக்கு தேவையான கலோரி அளவு கொண்ட உணவு சாப்பிட்டால், உடல் எடை எப்போதும் சீராகவே இருக்கும். தினசரி கலோரி அளவு, ஒவ்வொருவருக்கும் மாறுபடும். உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 20 கலோரி என்ற கணக்கில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். உடல் எடை சீராக இருக்க, ஒரு கிலோவுக்கு 30 கலோரி அளவு என்ற கணக்கும், உடல் எடை அதிகரிக்க, ஒரு கிலோவுக்கு 40 கலோரி அளவு உணவும் தேவை. அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு, இந்த அளவு மாறுபடலாம்.
2. இதய நோய்
இப்போதெல்லாம், 30 வயதிலேயே இதய நோய் தாக்க துவங்கி விடுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலம் வரை, இந்த நோயிலிருந்து தப்பித்து விடுவர். அதன் பின், ஆண்களை போலவே நோய் உண்டாகி விடுகிறது.
புகை பிடிக்காமல், புகை பிடிப்பவர்களின் அருகில் நிற்காமல் இருந்தால், இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் ஒரு மணி நேரமாவது நடை பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டால், படபடப்பு குறையும்.
3. சரிவிகித உணவு
சரிவிகித உணவு என்பது, அதிக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், நார்சத்து அடங்கிய உணவுகள், அசைவமாக இருந்தால், மீன் ஆகியவை சாப்பிடுவது தான். பூரிதக் கொழுப்பு, அதிக உப்பு ஆகியவை அடங்கிய ரெடிமேடு உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றில் அளவுக்கு அதிகமாக கலோரிகள் இருக்கும்.
4. உடற்பயிற்சி
ஒரு மணி நேரத்திற்கு ஓட்டப் பயிற்சியோ, நடை பயிற்சியோ, நீச்சலோ மேற்கொள்ளலாம். தினமும் 20 நிமிட தியானம், யோகா ஆகியவை மேற்கொள்ளலாம்.
5. புற்றுநோய் தவிர்ப்பு
புற்றுநோயை தவிர்ப்பது அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது ஆகியவை, வாழ்நாளை அதிகரிக்கும். சரியான உடல் எடை, சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, புகை பிடிக்காமை, ஓரளவு மட்டுமே மது அருந்துதல் ஆகியவை புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க உதவும். ஹெப்பாடைட்டிஸ் பி வைரசுக்கு தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால், கல்லீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம். கர்ப்பப் பை வாய் புற்றுநோயைத் தடுக்க, எச்.பி.வி., தடுப்பு மருந்து போட்டுக் கொள்ளலாம். "பாப் ஸ்மியர்' பரிசோதனை, மார்பக சுய பரிசோதனை, மேமோகிராபி ஆகியவை, மார்பகப் புற்றுநோயை தடுக்க உதவும்.
கோலோனோஸ்கோபி மற்றும் "ப்ராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்ட்டிஜென்' ஆகியவை, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள்.
6. காயங்களை தவிர்த்தல்
இந்தியாவில் ஆண்டுதோறும் 80 ஆயிரம் உயிரிழப்புகள், விபத்தால் ஏற்படுகின்றன. 12 லட்சம் பேர், படுகாயம் அடைகின்றனர்; மூன்று லட்சம் பேருக்கு, விபத்தால் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது, வாகனம் ஓட்டுபவர், பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இருவரும், ஹெல்மெட் அணிந்தால், விபத்து ஏற்படும் போது, காயமின்றி தப்பிக்கலாம். ஒரு வாகனத்தில் மொத்த குடும்பத்தையும் ஏற்றிச் செல்லவே கூடாது. கார் பயணத்தின் போது, "சீட் பெல்ட்' அணிவது கட்டாயம். சிலர், நெடுஞ்சாலைகளில் செல்லும் போது மட்டும், "சீட் பெல்ட்' அணிகின்றனர்; இது தவறு. குறைந்த தூரத்தில் செல்லும் போது கூட, "சீட் பெல்ட்' அணிய வேண்டும். வீடுகளில், வழுக்கு தரை, படிகள், குளியலறைகள் ஆகியவற்றில் வழுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் அதிக வெளிச்சம் ஏற்படுத்தி, கைப்பிடிகளும் வைத்தால், இந்த நிலையை தவிர்க்கலாம். கழிவறைகளில் போதுமான அளவு கைப்பிடிகள் வைத்தால், முதியோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
7. முழு உடல் பரிசோதனை
உயரம், எடை, ரத்த பரிசோதனை, இருதயம், நுரையீரல், வயிறு ஆகியவற்றின் செயல்பாடு ஆகியவை குறித்து, ஆண்டுதோறும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண், பல் ஆகியவற்றுக்கும் ஆண்டுதோறும் பரிசோதனை தேவை. பரிசோதனைக் கூடங்கள் நடத்தும் மருத்துவ முகாமில், அனைவருக்கும் ஒரே மாதிரியான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தேவையில்லை. வேண்டாத பரிசோதனைகளை செய்வது, அதிகச் செலவை ஏற்படுத்தும். உங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளை மட்டும் செய்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவை குறித்த பரிசோதனை, ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
8. தீவிர நோய்
நீரிழிவு நோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர பாதிப்பு கொண்டவர்கள், உணவுக் கட்டுப்பாட்டையும், மருந்து உட்கொள்வதையும், மிகச்சரியாக பின்பற்ற வேண்டும். டாக்டர்கள் குறித்து கொடுத்த நாட்களில், நேரில் சென்று பரிசோதித்து கொள்ள வேண்டும். ரத்தப் பரிசோதனையையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முறையாக கையாளும் நோயாளிகள், பெரிய ஆபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.
9. நோய் தடுப்பு மருந்துகள்
செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், குளிர்க்காய்ச்சலைத் தவிர்க்கும் ஊசிகளை, முதியோர் போட்டுக் கொள்ள வேண்டும். அந்தந்த ஆண்டுகளில் ஏற்படும் குளிர் காய்ச்சலை தடுக்க இந்த மருந்து உதவும். வேகமாகப் பரவும் நோய்கள் ஏதும் இருந்தால், அதற்கான தடுப்பு ஊசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும். 65 வயது நிரம்பியவர்கள், "நியூமோகாக்கல்' தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு முறை போடப்பட வேண்டிய ஊசி இது.
10. ஊட்டச்சத்து மாத்திரைகள்
முதியோருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தினமும் 1,200 மி.லி., கிராம் அளவுக்கு கால்சியம் சத்து மாத்திரை சாப்பிட வேண்டும். டானிக்குகளோ, புரோட்டீன் சப்ளிமென்ட்டுகளோ தேவையில்லை.


 
http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN
 



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment