Wednesday, November 17, 2010

காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ? - எழுத்துச்சித்தரின் பதில்கள்



ஐயா, உங்கள் பார்வையில் …..

1) அழகு என்பது என்ன ?


கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு .அறிவும் , அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல.மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.

2) காதல் என்பது மனிதனுக்கு அவசியமா ?

மிக மிக அவசியம். வேறு செய்வதற்கு இங்கு என்ன இருக்கிறது. ஆண்-பெண் நேசிப்பில் தான் உலகம் இயங்குகிறது. நேசிப்பை கொஞ்சம் கவித்துவமாக்கினால் ஏற்படுவது காதல். உடல் இச்சையை நெறிப்படுத்தி உள்ளத்தை அறிய முற்படுவது தான் காதல். நேர்மையாக இருப்பின் காதல் மிகுந்த பலம் தரும்.

3) கடவுள் உண்டா ?

உண்டு . நிச்சயம் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் எல்லா அசைவுகளையும் பார்க்கும் போது அதை இயக்குகின்ற சக்தியை கவனிக்க நேரிடுகிறது. அறிய வேண்டியது அதிகமிருக்கிறது என்பதை உணர்ந்தால் கடவுள் தோன்றுகிறார். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதை கடவுளை மறைக்கும்.

4) பணம் முக்கியமா ?

முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.

5) அரசியலில் ஈடுபடுவீர்களா ?

அரசியலில் ஈடுபட எதையும் தாங்கும் இதயம் வேண்டும். என்னால் சிலவற்றைத் தான் தாங்க முடியும். சில விஷயங்களிலிருந்து விலகியிருக்கத் தான் விருப்பம். உதாரணத்திற்கு மேடைப் பேச்சு எனக்கு விருப்பமில்லாத
விஷயம். பேசாத அரசியல்வாதி எங்கேனும் உண்டா.

6) படிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?

வெறும் ஏட்டுக் கல்வி எதற்கும் உதவாது. அனுபவ அறிவும், ஆன்றோர் வாக்கும் எழுதப் படிக்கத் தெரிந்தவரை நன்கு உயர்த்தும். ஏட்டுக் கல்வியும், அனுபவ அறிவும், ஆன்றோர் சொல்லும் ஒன்று கலந்து உள்ளே ஏற்படுத்தும் தெளிவே படிப்பு. இந்தத் தெளிவு தான் வாழ்க்கைக்கு கைவிளக்கு.

7) வரலாறு பாடமாக படிப்பது அவசியமா?

அவசியம். பாடமாகப் படிக்க ஆரம்பித்து , வரலாறு அறிவதில் ருசி ஏற்பட்டு, அதன் மூலம் ஏற்படும் பிரமிப்பை அனுபவிப்பது நல்லது. என் தகப்பன்,நான், என் பிள்ளை, பேரன் இவர்கள் மட்டுமே உலகம் என்று கொள்வது பேதமை. பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மனிதர் மிக நாகரிகமாக வாழ்ந்ததற்கு அடையாளங்கள் உள்ளன. வரலாறு புரியும் போது இனி வருவது பற்றி கவலையும் ஏற்படும். இந்த கவலையே அடுத்த தலைமுறையினரின் மீது அக்கறையாக மாறும்.


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment