Wednesday, April 20, 2011

அன்னாசிப்பூ




புதிய நோய்களைப்பற்றி அறியும்பொழுது, எங்கே நமக்கும் பரவிவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்புதான். எலிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் போன்ற போன்றவற்றைப் பற்றிய செய்திகள் காய்ச்சலைவிட வேகமாக பரவுகிறது. இத்தகைய நோய்களை தடுக்க முந்தைய காலங்களில் ஆறுகள், குளங்கள், கேணிகளில் மூலிகை வேர்களை ஊறவைத்தும், யாகங்கள், ஹோமங்கள் செய்து காற்றுமண்டலத்தை தூய்மை செய்தும், மூலிகை ஊறிய நீரை பிறர் மேல் தெளித்தும் அருந்த கொடுத்தும் நோய் வராமல் தடுத்துக் கொண்டனர். ஆனால் மாறி வரும் நவீன யுகத்தில் இதுபோன்ற வாய்ப்புகள் குறைந்துவிட்டதாலும், போக்குவரத்து எளிதானதாலும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பும் அதிகரித்துவிட்டது.


ஹோமங்கள், யாகங்களில் பயன்படுத்தப்பட்ட மூலிகை பொருட்கள் கிருமிநாசினி செய்கை உடையதுடன் வைரஸ் போன்ற நுண்கிருமிகள் பரவாமல் தடுக்கும் ஆற்றலையும் கொண்டிருந்தன. இவை ஹோமம், யாகத்தில் பயன்படுவது மட்டுமின்றி, அசைவ உணவுகளை உண்ணும்பொழுது ஜீரணிக்கச் செய்யவும் பயன்படும் அன்னாசிப்பூ என்னும் தக்கோலம் தொற்று நோய்க்கு காரணமான பல வகையான புளூ வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

இலிசியம் வீரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மேக்னோலியேசியே (இலிசியேசியே) குடும்பத்தைச் சார்ந்த இந்தச்செடிகளின் பூக்கள் அன்னாசிப்பூ அல்லது தக்கோலம் என்ற பெயரில் நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படுகின்றன. இதன்பூ மற்றும் பழங்களிலுள்ள டிரான்ஸ் அனித்தோல், பெனிக்குலின், ஈஸ்ட்ராகோல், பைசாபோலின், பார்னிசின், கேரியோபிலின், நிரோலிடால் போன்ற சத்துகள் சுரத்தை குறைக்கும் தன்மையுடையன.

வேதி தொழிற்சாலைகள் மூலமாக அன்னாசி பூவிலிருந்து பிரித்து எடுக்கப்படும் சிக்கிமிக் அமிலமானது எச்1என்1 வகை வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உடைய காரணத்தால் ஆசல்டாம்விர் என்ற வைரஸ் எதிர் உயிரி மருந்தில் ஒரு உள்வேதிப்பொருளாக இணைக்கப்படுகிறது. இந்த மருந்தின் ஆரம்பக்கட்ட ஆய்வின்பொழுது சிக்கிமிக் அமிலம் அன்னாசிப்பூவிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. தற்சமயம் பன்றிக்காய்ச்சலை தடுக்க வழங்கப்படும் டாமிபுளூ மாத்திரை தயாரிக்க மூலப்பொருளாக விளங்கியது அன்னாசிப்பூதான் என்பது பாரம்பரிய மருத்துவத்தின் சான்றாகும்.

சுவாசப்பாதையில் ஏற்படும் நுண்கிருமி தொற்று மற்றும் கழிச்சல் நீங்க அன்னாசிப்பூவை பொடித்து அரை முதல் 1 கிராம் அளவு இரண்டு முறை தேனுடன் கலந்து உட்கொள்ள சுவாசப்பாதையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அன்னாசிப்பூவை 5 கிராம் அளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மி.லி.,யாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்கு முன்பு குடித்துவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அரை முதல் 1 கிராம் அளவு பொடியை சூடான பால் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட தொற்று காய்ச்சலினால் தோன்றும் தொண்டைக்கட்டு, இருமல், தொண்டைவலி நீங்கும். சளி நன்கு வெளியேறும்.

செரிமானக் கோளாறுகளை நீக்குவதுடன் வயிற்றிலுள்ள காற்றை வெளியேற்றி பசியை உண்டாக்கும் தன்மை உடையதால் அன்னாசிப்பூ பிரியாணி போன்ற செரிக்கக்கடினமான உணவுகள் தயார் செய்யும் பொழுது மசாலாவாக அரைத்து சேர்க்கப்படுகிறது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment